திசைக்காட்டி இதழுக்கு எனது நேர்கானல்...  

Posted by நாண்

தனித் தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வியே அவசியமற்றது. – இயக்குநர் கீரா..

kera 1
இயக்குநர் கீரா என்கிற மூர்த்தி. இவரின் ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம். தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநனராக பணியாற்றியவர். ‘தமிழு’, ‘வதை’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின் மூலம் யதார்த்த சினிமாவின் புதிய பரிமாணம் கொடுத்தவர். ஊடகங்களையும், திரைத்துறையைச் சார்ந்தவர்களையும் பிரம்மிக்க வைத்த படம் ‘பச்சை’. முதல் படத்திலேயே படத்தின் பங்களிப்பாளர்கள் பெயர்கள் மிக நேர்த்தியாய் தனித் தமிழில் இடம்பெற்றது போற்றுதலுக்குறியது. புதுமுகங்கள் நடித்த இந்த படைத்தை மீடியாக்களும், விமர்சகர்களும் பெரிதாக சிலாகித்து எழுதிய படம். மண் சார்ந்த உணர்வுகளுடன், யதார்த்தமான நல்ல கதைகளுடன் நையாண்டி, காதல், வன்மம், அரசியல் என அழகிய பதிவுகளுடன் கூடிய கிராமத்து வாழ்க்கையை நிதர்சனமாய் படம் பிடித்தவர். இயக்குநர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, தன்மானம் உள்ள தமிழர்களையும் ஈர்த்துள்ளார் என்பது மிகையல்ல. அடுத்த படப்பிடிப்பு வேலைகளுக்கிடையில் திசைகாட்டிக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்து கேள்விகள் தொடுத்தோம்.
keera 1உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
எனது ஊர் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் என்னும் கிராமம். முழுக்க உழைக்கும் மக்களை மட்டுமே கொண்ட விவசாய பூமி… வானம் வெப்பலை பொழிந்து கரட்டு தூவல் மிதந்து கிடக்கும் மண் எங்களுடையது… வறண்ட நிலத்தில் செழிக்கும் இருங்கு சோளம் மற்றும் கடலை, மொச்சை விளையும் அந்த மண்ணில் முக்கிய வாழ்வாதாரமாக வெங்காயம் விளைகிறது. ஆம் அதுவே எங்கள் மக்களின் குடி பயிர். எனது குடும்பம் முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. அப்பா வடிவேல் – அம்மா அலற்மேல் எனக்கு மேல மூன்று அண்ணன், ஒரு அக்கா நான்தான் கடைசி. இதில் அப்பாவும் இரண்டு அண்ணனும் இறந்து விட்டனர். நான் என் இணையர் தனலட்சுமி, மகன் வைகறையாழன் மற்றும் மகள் மதிவதனியுடன் 15 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.
உங்கள் அரசியல் பற்றி?
எமது அரசியல் பெரியாரியத்தில் தொடங்கி, மார்க்சியத்தில் தெளிவடைந்து எம் மண்ணுக்கான தமிழ் தேசிய அரசியலில் வந்து நிற்கிறது. தமிழ் நாட்டில் எமக்கு தலைவன் பேராசான் தோழர் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் வழியிலும், தமிழீழத்தில் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியிலும் எனது அரசியல் தடம் பயணிக்கிறது.
திரைத்துறையை ஏன் தெரிவு செய்தீர்கள்?
திரைத்துறை தமிழர்கள் வசமாகவேண்டிய அவசியமும் தேவையும் தமிழர்களுக்கு இருக்கிறது. கலை மீது கொண்டிருந்த தாகமும், தமிழர்களுக்கான அரசியலை ஊடகத்தின் மூலமும் கொண்டு செல்ல முடியும் என்கிற திடமான நம்பிக்கையும் கொண்டிருந்ததால் திரைத்துறைக்கு வந்தேன். ஆனால் பல கசப்புகளை அது கொடுத்திருக்கிறது. கசப்பை தின்று செரித்துக் கொண்டிருக்கிறேன். அதுவே எம் மக்களுக்கான சினிமாவை நோக்கி நகர்த்தும் என்கிற நம்பிக்கையோடு…
புதுமுகங்களைப் பயன்படுத்தியதின் நோக்கம் என்ன?
புதுமுகங்களை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் இருந்தது. தமிழர்க்கான அரசியல் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்களும், ஒரு விடுதலை இயக்கமும் முற்றாக நசுக்கப்பட்ட பொழுது, எம் மக்களின் உழைப்பில் திளைத்த பெருங்கூட்டம், அந்த அவலத்தை பேசாத வேற்று மொழி நடிகர்களின் பாராமுகமுமே இத்தகைய மனநிலைக்கு தூண்டியது. அதோடு நான் தேடிய அந்த கதைக்கான முகங்களுடன் கூடிய மனிதர்கள் கிராமத்தில் மட்டுமே இருந்தனர். பொதுவாக இது போன்ற அசாதாரண வாழ்வைக்கொண்ட கதைகளைப் புதிய முகங்களை வைத்து நேர்த்தியாக எடுப்பது சிரமம். ஏனெனில் நடிகர்கள் எப்பொழுதும் நடிக்க தயாராக தங்களை வைத்திருப்பர். புதிய முகங்களுக்கு விளக்க வேண்டும். ஒவ்வொரு அசைவையும், பார்வையையும் அவர்கள் உள்வாங்க வெகுநாட்கள் பிடிக்கும். மிக கடுமையான, சவாலான பணி.
நண்பர் பச்சையை பற்றி சொல்லுங்கள்?
பச்சை எனது நண்பனல்ல. எனது நண்பனின் நண்பன். பச்சை இறந்து போன பிறகுதான் அவனை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எப்படி அவனை தெரிந்து கொண்டேனோ அதை அப்படியே காட்சி படுத்திருக்கிறேன். அதுவே அந்த கதைக்கு செய்யும் நேர்மையாக உணர்ந்தேன். அதுவே புதிய வகை கதை சொல்லல் உத்தியாக பேசப்பட்டது. பச்சை என்பது தனி மனிதன் அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி. திமுக, அதிமுக மற்றும் இன்ன பிற ஓட்டரசியல் கட்சிகளிலும், நடிகர்களுக்காக திரையரங்க வாசலில் முதல் தோரணம் கட்டி கொண்டிருப்பவனில் ஒருவனாக அவன் இருக்க வாய்ப்புகள் அதிகம். துரோகங்களை மறந்து கூட சிலர் தங்களது கட்சிக்காக வாதாடும் எவனோ ஒருவன் கூட எனக்கு பச்சையை நினைவுக்கு கொண்டு வருகிறான்.
உங்கள் படத்தில் இடம்பெறும் பாடல்களில் இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா‘, ‘சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்‘, இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?’, எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்‘, தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்‘, விழ விழ எழுவோம்என வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள்?
அதை பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது… அது எங்களின் அழுகை, கண்ணீர், வலி, ஆசை, மனஉறுதி, வீரம்….ம்ம்ம் அது எதுவுமே எங்களிடம் தற்பொழுது இல்லை. நாடகத்தின் உச்சகட்டத்தில் பார்வையாளன் ததும்பி அழுது, பின் ஆசுவாசப்படுவது போல எல்லாம் முடிந்து விட்டது. 2006இல் ‘வதை’ குறும்படதிற்கு ஈழம் சார்ந்த கதையை எடுத்த பொழுது கேள்விப்பட்டதை தொகுத்து எடுத்தோம். 2009இல் அதை ஒளி(லி)யாக காணக் கிடைத்தபொழுது அதிர்ந்து விட்டேன். நான் எடுத்தது போல பல மடங்கு வன்முறைகள், பாலியல்கள், எம் இனத்தின் கதறல்கள், இதை சொல்லும் பொழுது கூட ஒரு கணம் நெஞ்சு நடுங்குகிறது.
keera 2தற்போது தமிழகத்தில் தலித்துகள் மீதும், அவர்கள் இருப்பிடம் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை எப்படி பார்கடகிறிர்கள்?
முட்டாள்கள் இனம் கொத்துகொத்தாக சாகும் பொழுது சாதிக்காரனை திரட்டி நிற்க முடியாத கோழைகள், தங்களது அரசியல் சுய லாபத்திற்காக மக்களை சாதியாளர்களாக மாற்றும் கேவலம் நமது தேசத்தில் தான் நடக்கும். சாதியை பகுத்து கொடுத்தவனின் காலில் விழுந்து கொண்டு, தனக்காக கடும் உழைப்பை கொடுத்தவன் மீது வன்முறையை ஏவுவது கேவலம். இராயிரம் ஆண்டுகளாக அடிமை படுத்தியவன் மேலே ஒரு படி எழுவதை கூட பொறுக்க முடியாமல், இரண்டு தலைமுறைகளாக சேகரித்ததை அந்த மூன்று கிராமங்களை எரித்ததுதான் உச்சபட்ச வன்மம். நாகராசன், இளவரசன் படுகொலைகளின் நீதியை இந்த சமூகம் ஒரு போதும் தரப்போவதில்லை. பா.ம.க.வை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றுவது மக்களின் கடமை. அதோடு உருவாகும் ஒடுக்கப்பட்டோர் அல்லாதவர் கூட்டணியையும் வெளியேற்ற வேண்டும். ஒடுக்கப்பட்டவன் சங்கம் தொடங்குவது சமூக நீதி என்பது புரியும் பொழுது தான் சாதி சங்கங்கள் நீர்க்கும்.
மூன்று தமிழ் மரண தண்டனைக் கைதிகளைப் பற்றி…?
மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மூவரும் அந்த கொலையில் சம்மந்தபட்டிருந்தால் கூட கொலை செய்யும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. இதுவரை அரசு நடத்திய போலி என்கவுன்டர்களுக்கு அதை செய்தவர்களை, அரசின் அடியாள்களை தூக்கிலிட்டு விட்டு பின்பு பேசட்டும். நீதி குறித்து உண்மையான அரசு உண்மையாளர்களை விடுதலை செய்து, அவர்களின் வாழ்க்கைக்கு நீதி தர வேண்டும். உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கும் பொழுது எம் அண்ணன்களை தண்டிப்பது எந்த வகையான நியாயமும் இல்லை.
ஈழத்தில் இனப்படுகொலை பற்றி…?
இனப்படுகொலை செய்தது இலங்கை அல்ல இந்தியா என தெரிந்தும் அந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது சொந்தங்களை நமது தேசம் என நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நாடு படுகொலை செய்தது. அந்த நாட்டில் நாம் எதுவும் பேச இயலாமல் இந்தியன் என பெருமை பேசும் ஒரு வாய்ப்பு உலகத்தில் எந்த இனத்திற்கும் வாய்க்காது. கொத்து கொத்தாய் கொல்லப்பட்டது உலகிற்கே தெரிந்தும் நிலவும் கள்ள மௌனம் கேவலமான ஒன்று. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் முகங்களில் தொங்கும் சதைகளின் உள்ளே எம் இன கனவு புதைக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் எல்லாம் இலங்கைக்கு ஆதரவாக உள்ள இக்காலகட்டத்தில் தனி ஈழம் சாத்தியமா?keera 4
தனி ஈழம் சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வியே அவசியமற்றது. தலைவர் உருவாக்கிய தனி ஈழத்தில் கொஞ்ச காலம் வாழத்தானே செஞ்சோம். இப்ப எதிரி கைக்கு போயிருக்கு அதற்கு காரணம் துரோகம். இனி அப்படி நடக்காம பார்க்கணும். மலையக மக்களையும், முஸ்லிம் மக்களோடையும் இணைந்து தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து மாற்று திட்டம் உருவாகனும். உலக நாடுகள் நமக்கெதிரா நிற்கிறது வலியவன் வென்றான் என்கிற அடிப்படையில் அது எப்ப வேணுமானாலும் மாறும் அது வரைக்கும் நமது தவறுகளை களைவோம். மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து தலைவரின் கனவை, ஈழத்தை பெறுவோம். தற்போதைய முதல் தேவை சிறப்பு முகாம்களில் இருக்கும் நமது மக்களின் வாழ்வாதாரத்தை சரி வேண்டும். மீண்டும் பொருளாதார கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். உலகம் பரந்து நிற்கும் சொந்தங்கள் அதற்கான பணியில் ஈடுபட வேண்டும். மக்களை மீட்பது தான் முதல் பணியாக இருக்க முடியும்.
கம்யூனிஸ்டு கட்சிகள் அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை என்கிறார்கள். பெரியாரியத்தில் தொடங்கி, மார்க்சியத்தில் தெளிவடைந்ததாக சொல்லும் நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள்?
யார் கம்யுனிஸ்டுகள்? என்னும் கேள்வியிலிருந்து தொடங்குகிறது உங்களின் கேள்விக்கான பதில். இவர்கள் கம்யுனிஸ்டாக தங்களை நம்பி கொண்டிருக்கிறார்கள். ஏன் நானும் கூட அப்படித்தான். உண்மையான பொதுவுடமை வாதி மார்க்சியத்திற்கு துரோகம் இழைப்பதில்லை. ஓட்டரசியலுக்காக எல்லா சமரசங்களையும் செய்து கொண்டு பிழைப்பு நடத்துவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. விஞ்ஞானத்தை மார்க்சியம் வர வேற்கிறது, ஆனால் அது மக்களின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். மக்களை அழிவுபாதைக்கு இட்டு செல்ல கூடாது. ரசியாவின் செர்னொபில் அனணு உலையால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களின் வாழ்வை அறிந்து கொண்டே இவர்கள் முகமூடிகளை ஒருங்கிணைந்த இந்தியாவின் மீது திணிக்கிறார்கள். ஒரு வேளை கூடங்குளம் அணு உலை அமெரிக்காவால் வந்திருந்தால் எதிர்த்திருப்பார்கள். ஏனெனில் ரசியா, மற்றும் சீனாவில் இருந்து எது வந்தாலும் அது நல்லதென்றும், பிற நாடுகளில் இருந்து எது இறக்குமதி செய்யப்பட்டாலும் அது தீங்கிழைப்பவை என்றும் இவர்களுக்கான மந்திரவாதிகள் சொல்லி தந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை புறக்கணிப்போம். அணு உலைக்கு மாற்றாக மின்சார உற்பத்திக்கு எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. காற்றாலை மூலம் பெருமளவு நமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதை ஊக்கப்படுத்த வேண்டிய அரசுகள் திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, சொந்த மக்களை பலியிட துடிக்கிறார்கள். ஒப்பந்த பத்திரத்தில் விபத்து நடந்தால் ஒருங்கிணைந்த இந்திய அரசுதான் அதன் இழப்பீட்டிற்கு முழுபொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதற்கு கையொப்பம் இட்டவர்கள் எப்படி மக்களுக்காக செயல்படுவார்கள். “போபாலில்“ விசவாயு தாக்கி கொல்லப்பட்ட மக்களின் பிணத்தின் மீது நின்று குற்றவாளியை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் தான் அணு உலை பாதுகாப்பானது என குதிக்கிறார்கள். பெரும் பணம் செலவு செய்து விட்டதாகவும், அதனால் திறந்துதான் தீர வேண்டும் எனவும் பேசும் அரசுக்கு இந்த போலிகள் மாவறைக்கிறார்கள். ஏன், சேது கால்வாய் திட்டமும் தொடங்கி பெரும் பணம் செலவிடத்தானே செய்தார்கள். அது ஏன் அணில்கள் கட்டியதாக கதை விடும் மணல் திட்டிற்காக திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நமக்கு சேது திட்டமும் பவள பாறைகளை அழிக்கும், மீன் இயல்பான உற்பத்திக்கு எதிரானதாக இருப்பதால் மறுக்கிறோம்.
நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டத்தை (சமச்சீர் கல்வி) வரவேற்ற நாம், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் என்பது அரசு பள்ளியில் படிக்கும் அடித்தட்டு மாணவர்களின் தரத்தை மேலும் உயர்த்தும் தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
உண்மையில் அரசு சொல்லும் ஆங்கிலவழி கல்வி திட்டம் என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. திராவிட அரசுகள் நம்மை காலம் காலமாக தொடர்ந்து ஏமாற்றி வருவதன் தொடர்ச்சி. திராவிட அரசுகள் உருவான பின்புதான் “மெட்ரிக்“ எனப்படும் பதின்நிலை கல்வி கூடங்கள் தமிழ் நாட்டில் பெருகின. அவர்கள் தான் திட்டமிட்டு வளர்த்தெடுத்தார்கள். இந்திக்கு மாற்றாக இரு மொழிக் கொள்கை என்பது சரிதான். ஆனால், அந்த இரு மொழிக் கொள்கை திராவிட அரசுகளால் ஆங்கில மோகத்தை கட்டமைக்கவே பயன்பட்டது. தாய் மொழியில் அறிவியலை கொண்டு வராமல் தாமதப்படுத்துவது. மக்களின் புழக்கத்திற்க்கு வந்த பிறகு அறிவியலால் ஏற்பட்ட தொழில் நுட்பங்கள் பழகிய பிறகு அதை தமிழ் படுத்த முனைவது என ஏமாற்றினார்கள். உண்மையில் ஒரு தொழில் நுட்பத்தை தருவிக்கும் பொழுதே அதனை வல்லுனர்கள் கொண்டு தாய் மொழியில் உள்வாங்கப் பட்டு மக்களுக்கு பகிர்ந்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டு காலம் கடத்தி மக்கள் ஆங்கில சொற்களுக்கு அடிமையான பிறகு அதை தமிழ் படுத்தியதாக தம்பட்டம் அடிக்கும் பொழுது, தாய் மொழி பின்னுக்கு செல்கிறது.
கற்றல் மொழி முன்னுக்கு வருகிறது. இது ஒருவகையில் பார்த்தால் வளர்ச்சியாக தோன்றும். ஆனால் தமிழ் வழியில் கற்ற கிராம புற மாணவர்களையும், பெற்றோர்களையும் நகர் புற வாசிகளிடமிருந்து தாழ்த்தி வைக்கும் முறையாகும். இது ஒரு வகையான நவீன தீண்டாமை. இப்பொழுது எல்லோருக்கும் ஆங்கில கல்வி என்பது அரசின் தோல்வி என்றாகிவிட்டது. மெட்ரிக் பள்ளிகளை முழுக்க தமிழ் வழியாக அரசு ஆணை இடுவதை விட்டு விட்டு மூட்டை பூச்சிக்காக வீட்டை கொளுத்துகிறது மக்கள் விரோத அரசு. முற்றாக தாய் மொழியை, தமிழை அழிக்கும் முயற்சியாகும். தரம் என்பது இங்கே வேலை வாய்ப்பை மட்டுமே குறிக்கிறது. ஆங்கில மொழியால் தரம் உயர்கிறது என்பது மிக அருவருப்பான தோற்றம். இதை அரசு செய்வது சொந்த மக்களுக்கு செய்யும் துரோகம். ஒண்றும் வேண்டாம், அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்குதான் 80 சதவீதம் அரசு வேலையில் முன்னுரிமை என ஒரு சட்டம் கொண்டு வந்தால் கூட அனைத்து தனியார் கல்வி கூடங்களும் தமிழுக்கு வந்து விடும். ஆங்கிலம் ஒரு மொழியல்ல அறிவு என்கிற போதாமையை திட்டமிட்டு தனியார் பள்ளி கூடங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த முட்டாள்தனத்தை அங்கீகரிக்கும் அரசின் முட்டாள்தனத்தை என்னவென சொல்வது.
சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், இயற்கை வளங்களின் சூரையாடல்கள் எக்பதற்கு எதிராக பல மாநிலங்களில் எதிர்ப்புகள் பெரிய அளவில் தோன்றி றுக்கிறது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லையே? காரணம் தமிழகத்தில் பெரிய அளவு கணிமவள சுரண்டல்கள் நடைபெறவில்லை என்று கருதலாமா?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச வளத்தையும் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது, மக்களின் உழைப்பை கண்கட்டி வித்தை காட்டி நடுவண் அரசு விற்கிறது. தமிழ் நாட்டில் இயற்கை வளங்கள், மனித வளங்கள் சூறையாடப்படுவது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இல்லை. ஒரு பாமர விவசாயி “மீதேன்“ எடுப்பது ஆபத்து என புரிந்து வைத்திருக்கிறான். ஒரு கடலோடி அணு உலை தனக்கு ஆபத்தானது என உணர்ந்திருக்கிறான். நியுட்ரினோவால் ஏதாவது ஆபத்து விளையுமா என கேள்வி எழுப்புகிறான். அந்த உணர்வை அடுத்த கட்டதிற்கு எடுத்து செல்ல வேண்டும். அய்யா உதயகுமார் மாதிரி ஒவ்வொரு மட்டத்திலும் மக்கள் தலைவர்கள் வர வேண்டும். அப்பொழுது இன்னும் வீரியம் மிகுந்த போராட்டங்களை நாம் கைக்கொள்ள முடியும். புதிய தலைமுறை மாணவர் திரட்சி அனைத்து போராட்டங்களையும் கையில் எடுக்க வேண்டும். மாணவ தலைமைகள் சரியான மக்களுக்கான அரசியலை கைக்கொண்டு போராட முன்வர வேண்டும். மேலும் தமிழ் நாடு தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருங்கிணையும் மக்களை திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மடை மாற்றி விடுகிறது. ஈழம், இந்துத்துவ பாசிசம், பரமகுடி, தர்மபுரி, கூடங்குளம், ஆற்று மணல், விவசாய நில மீட்சி, பஞ்சமி நில மீட்சி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், நதி பங்கீடு, தாய் வழி கல்வி, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டு எதிர்ப்பு, தேசிய இனங்களின் விடுதலை என நம் முன்னே விரிந்து கிடக்கும் வல்லாதிக்கத்தின் கூட்டனியை முறியடிக்க எல்லா தமிழர்களும், சாதி கடந்து, மதம் கடந்து ஓரணியில் திரள்வேண்டும். தமிழ் தேச விடுதலையை முன்னெடுக்கவேண்டும். இதுவே நமக்கு இருக்கும் ஒரே வழி.. 


 http://thisaikaddi.com/?p=20466

This entry was posted on Tuesday 3 September 2013 at 00:26 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment