பெருங்கனவு தேசம்-3  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்!

இயக்குநர் கீரா

ட்டுப்பாடு இல்லாத குதிரையின் குளம்பில் மாட்டிய மலர் மாலையைப்போல என்னுடைய மன ஓட்டம் தறிகெட்டுக் கிடந்தது.
ராயபுரத்தில் இருந்து எந்தப் பேருந்திலும் ஏறவில்லை. கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு வருடம் உழைத்து, ஓட்டுநர்களிடம் திட்டுவாங்கி, பூனாவின் கண்டாலா காடுகளில் கட்டை தூக்கி, அலைந்து பெற்ற ஓட்டுநர் உரிமத்தை, முகம் பழகாத ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டோமே என மனம் அலைந்துகொண்டு இருந்தது. கண்களில் பூச்சி பறந்தபோதுதான், இதுவரை எதுவும் சாப்பிடாதது புரிந்தது. நீண்ட தூரம் மாநகரப் பேருந்துகள் கக்கியப் பெரும்புகையைச் சகித்துக்கொண்டு நடந்து வந்ததால் உடம்பில் பெரு வியர்வையும் நாவறட்சியும் போட்டி போட்டபடி இருந்தன. அவசியம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தேனீர்க் கடையைத் தேடிய என் கண்ணில்பட்டது பீச் இரயில்வே ஸ்டேசன். எதையும் யோசிக்காமல் விறுவிறுவென உள்ளே நுழைந்து தண்ணீர் பம்பைத் தேடினேன். ரயில்களின் தொடர் ஓட்டத்தில் மக்கள் கும்பல், கும்பலாக ஏறியபடியும்  இறங்கியபடியும் இருந்தார்கள். தண்ணீர் எங்கே என யாரிடம் கேட்பது என்றுகூடப் புரியவில்லை. ஏனெனில், நின்று பதில் சொல்லும் இயல்பான முகம் ஒன்றுகூட கண்ணில் படவில்லை. தூரத்தில் ஒரு காவலர் நின்றுகொண்டு இருந்தார். அவரிடம் கேட்கலாம் என நான், யோசித்து முடிக்கும்முன்பே அவரும் என்னைநோக்கி வந்தார். தயக்கம் கலைந்து '' ஸார்... தண்ணீர் எங்கே இருக்கு?'' என்றேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து '' டிக்கெட் எடு'' என்றார். நான் ரயிலில் ஏறியதாகத் தவறாக எண்ணிவிட்டாரென நினைத்து, '' ஸார்... நான் ரயிலிலவரல... தண்ணி குடிக்கத்தான் இங்கேவந்தேன்'' என்றேன். அவர் என்னை, அவரின் பின்னாலேயே வரும்படி கூற,  நடந்தேன்.
அந்த இடம் ரயில்வே  நிலையத்துக்குள் இருக்கும் காவல் நிலையம். காவல் நிலையத்தைக் கண்டதும் லேசான நெருடல் ஏற்பட்டது. தயக்கத்தோடு நான் காவல் நிலைய வாசலிலேயே நிற்க, என்னை அழைத்த காவலர் என்னுடைய கழுத்தின் பின்புறம் கைவைத்து நிலையத்துக்குள் தள்ளினார். இயல்பாகவே தவறுகளைக்கண்டு பொங்கும் கிராமத்து குணம் அங்கே எட்டிப்பார்க்க பிடரியைப்பற்றி இருந்த  கையை மூர்க்கமாக எடுத்துவிட்டேன்.
அதுதான் தாமதம், பளீரென கன்னத்தில் ஏழு அறைகள் வரிசையாக விழுந்தன.  நெடுந்தூரம் நடந்த களைப்பும், நாவறட்சியும், பசியும் ஒரே தளத்தில் நின்று என்னை வாட்டியதாலும் நகரத்தில் கேட்பாரற்ற இயலாமையும் என்னுடைய மூர்க்கத்தை செயல் இழக்கச் செய்தன.
மிகுந்த தன்னிரக்கத்தோடு காவல் நிலையத்துக்கு அழைத்த விபரத்தைக் கேட்டேன். விரைப்பாக முறைத்த காவலர் அருகேவந்து என் பேன்ட் மற்றும் சட்டையில் இருந்த பர்ஸ், கர்ச்சீஃப், முகம் பார்ப்பதற்காகப் புதிதாக வாங்கிவைத்து இருந்த சிறு கண்ணாடி,  சட்டைப்பையில் இருந்த சில்லறைகள் முதற்கொண்டு என அனைத்தையும்  எடுத்துத்  தனது டேபிள்மீது வைத்தார். சில்லறைகளோடு சேர்த்து மணிபர்ஸில் இருந்த தொகை மொத்தம் முன்னூற்று சொச்சம் இருந்தது. காவலரின் முகத்தில் கடுகடுப்பு குறைந்தது.
'' பிளாட்ஃபார டிக்கெட்டும் இல்லாம, ரயில் டிக்கெட்டும் இல்லாம ரயில்வே ஸ்டேஷன்ல நின்னது தப்பு. அதுக்கு ஃபைன் 1,500 ரூபாய் கட்டணும், இல்லேன்னா, ஜெயிலுக்குத்தான் போகணும்’ பேசிக்கொண்டே எனது முன்னூற்று சொச்ச பணத்தையும் தன்னுடைய பேன்ட்டில் சொருகிக்கொண்டார். என் நிலையை எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. உயர் அதிகாரி வரும்வரை உட்காரச் சொல்லிவிட்டார்.
தொடர் வண்டி நிலையத்தில் நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டுமென எனக்குத் தெரியாது. பிறந்ததில் இருந்து ரயில் பயணமே செய்யாத எனக்கு இது தெரியவில்லை. அதற்காக, சிறை தண்டனை என்பது எல்லாம் மிகக் கேவலமாகத் தோன்றியது. பயணம் செய்யப் பணம் இல்லாதவனைச் சிறையில் தள்ளி உணவுகொடுத்து, தங்கவைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசமைப்பு. பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டிவிட்டாலாவது அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.
நேரமாக, நேரமாகக் குழப்பமும் பயமும் படர்ந்தது. முடிவுக்கு வந்துவிட்டேன். காவலர் அசந்து இருந்த நேரத்தில் பிடித்தேன் ஓட்டம். ஓடினேன்... ஓடினேன்... நெடுந்தூரம் ஓடினேன்.  கடற்கரையில் பெரிய கூட்டம் இல்லை. குப்பைகளும் வழிப்போக்கர்களும், கிடைத்த நிழலில் ஒதுங்கிக்கிடக்கும் கூடாரமாகத்தான் இருந்தது. காந்தி முதல் கண்ணகிவரை காக்கையின் எச்சிலால் முகம் தொலைந்து நின்றார்கள். கடற்கரையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் சுதந்திர தாகத்தைக் காதலர்கள் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நெருக்கடிகளால் சூழ்ந்திருக்கும் இந்த நகரின் மனநெருக்கடிதான், குறிப்பாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் இட நெருக்கடிதான் இங்கே சுதந்திர வேட்கைகொள்ளச் செய்து இருந்தது. காந்தி அவர்களுக்குக் காவல் இருந்தார். பலூன் சிறுவர்கள், காதலர்களை எவ்வளவோ சீண்ட முயற்சிசெய்தும் முடியவில்லை. சூரியன் தனது வெப்பத்தின் மூலம் கொடுக்கும் நெருக்கடியையே சந்தித்த காதலர்களால் குழந்தைகளின் விளையாட்டைப் புறக்கணிக்க முடியாது.  இங்கே ஒன்று சொல்ல வேண்டும். காதல் என்றால் ஒன்றே ஒன்றுதான். அதென்ன நல்ல காதல், கள்ளக்காதல் என்று பிதற்றுகிறார்கள். காதலை ரகம் பார்க்க முடியாது.
சென்னையைப்பற்றிப் பேச வேண்டுமானால், கடற்கரையை மட்டும் பேசினாலே போதுமானது. அதுவே காலத்தின் சாட்சியாக, இந்த நகரம் உருவானதை உள்வாங்கி இருக்கிறது. நகரத்தின் கழிவுகளில் இருந்து ஆசை, கோபம், ஆற்றாமை, நேசம், கனவு, காதல் என மனிதர்களின்  எல்லா பரிமாணங்களையும் தன் முகத்தில் சுமந்தபடி திரிகின்றது.
எம்.ஜி.ஆர் சமாதி...! அப்பா எம்.ஜி.ஆரின் தீவிர விசிறியாக இருந்து, தொண்டராகி, அதையே எங்கள் நெஞ்சிலும் விதைத்துவிட்டுச் சென்றிருந்தார். தீவிர வாசிப்பின் வழியாக, தமிழகத் தலைவர்கள் மீது எந்தவித மரியாதையும் இல்லாமல் போனாலும் எம்.ஜி.ஆரை ஏனோ விடமுடியவில்லை. பட்டுக்கோட்டையாரின், கண்ணாதாசனின் தத்துவச் செறிவுமிக்க பாடல்களை என் நெஞ்சில் விதைத்தது எம்.ஜி.ஆரின் திரைப்படங்களே. சமூகத்துக்கு உதாரண மனிதராக, சமூக அவலங்களுக்கு எதிராக நிற்கத் தூண்டியதன் பின்னணியில் எம்.ஜி.ஆரின் படங்கள் இருந்தன.
ஆனாலும், இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இத்தனை கோடிகள் கொட்டி சமாதி அமைக்க வேண்டுமா? மக்கள் தலைவர்கள் மக்களைவிட எளிமையாக அல்லவா இருக்க வேண்டும்? சமாதி அவ்வளவு குளுமை. வெறுந்தரையில் சாப்பிடலாம். சென்னையில் சில கட்டடங்களைத்தவிர அண்ணா சமாதியும் எம்.ஜி.ஆர் சமாதியும் பிரமாண்டத்தின் உச்சம். சதுக்கத்தை அவ்வளவு அழகாக செதுக்கி இருந்தார்கள். அந்தப் பளிங்கு மேடையைச் சுற்றிவந்தார்கள் மக்கள். அணையா தீபத்தின் முன்பு தங்களால் இயன்ற சில்லறைகளைப் போட்டுவிட்டுக் கும்பிட்டுப் போனார்கள். அதைக்கூர்ந்து கவனித்தபோது, நான் அண்ணா நகருக்குப் போய்ச் சேர்வதற்கான விடை கிடைத்தது. 'திருடாதே பாப்பா திருடாதே' என எம்.ஜி.ஆரின் முக பாவத்தில் கேட்ட அந்தப் பாடலைக் கர்ண கொடூர குரலானாலும் பாடியே தீருவது எனப் பாடி பலபேரிடம் திட்டுவாங்கி பழகி இருந்த எனக்குத் திருடும் எண்ணம் வந்தது. சமாதிமுன்பு ஆட்கள் இல்லாத ஒரு தருணத்தில், சமாதியை வலம்வந்து அணையா தீபத்தில் இருந்து மற்றவர்கள் போட்டிருந்த காசைப் பொறுக்கி, அவசரமாக என்னுடைய பேன்ட் பையில் போட்டுக்கொண்டு விறுவிறுவென வெளியேறினேன்.
படபடத்த இதயத்துடன், சுற்றிலும் பார்த்தபடி குற்ற உணர்வு மேலிட, நடந்தவன் சட்டென நின்று சமாதியை உற்று நோக்கினேன். அது ஒரு அழகான பார்வை. சமாதிக்குள் ஊடுருவி அவரின் சடலத்தின் முன்பு நின்றது. எம்.ஜி.ஆர்., மூக்கில் வைக்கப்பட்டு இருந்த பஞ்சோடு கண்மூடிப் படுத்து இருந்தார். சட்டென அவர் விழிகள் திறந்துகொண்டன. பார்வை என் பார்வையைத் துளைத்து எடுத்தது. நாக்குக் குளறியது.
''இந்தக் காசை எப்படியாவது ஒருநாள் உன்கிட்டயே கொண்டுவந்து வெச்சிடுவேன்'' - இது நான்.
எம்.ஜி.ஆரிடம் மெல்லிய புன்சிரிப்பு.
''இல்லை... நிஜமாவே திருப்பித் தந்திடுவேன்''
அவரின் புன்சிரிப்பு மறையவே இல்லை.  அவருக்குக் கொடுத்த வாக்கு அப்படியே இருக்கிறது. இதுவரை  அந்தக் காசை திருப்பிக் கொடுக்கவே இல்லை.
(கனவு நிஜமாகும்...) 


 http://en.vikatan.com/article.php?aid=24293&sid=689&mid=31

This entry was posted on Monday 2 September 2013 at 14:23 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment