அவள் அப்படித்தான் சொல்வாள்...  

Posted by நாண் in , , , , ,

கனிவு செழித்துக் கிடந்த கார் காலம்...
அவள் அப்படித்தான் சொல்வாள்...
மினுக்கட்டான்கள் மின்னும் நேரங்களில் ஓயாமல் சொல்வாள்
கார் காலம் தொடங்கி விட்டதாக..
தட்டான்கள் சூழ்ந்த இருள் ஒன்றின் பொழுதும்...
ஓடையிலிருந்து பெருகி வரும் செம்மைநீரின் சுவடுகளை வைத்தும் ...
குளிர்ந்த வெப்பம் பெருகியோடும் கணங்களில் கூட
அப்படித்தான் சொல்வாள்..
அந்த நாட்களிலெல்லாம் அவள் வேப்பம் பூ சொறியும்
தூளியில் அமர்ந்தபடி கோடிக்கணக்கான கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பாள்..
அவளுக்கு மகரந்த நாட்கள் அவை மட்டுமே..
அவளது கதைகள் கேட்கவென நிலவின் வெம்மையிலிருந்து மையெடுத்து இதயத்தில் பூசிக் கொள்வானவன்
அவ்வளவு தூய்மையான கதைகள் அவை..
தானும் அப்பொழுதுகளில் தூய்மையடைவதாக நம்பினானவன்...
அவள் கதைகளை தாழம்பூ நறுமணத்தோடு படர விட்டிருந்த
அந்த அந்தியில் அவனுடனே சிலர்
அமர்ந்திருப்பதையும்
அவள் சொல்லிய கதைகளின் பறவைகளாகவும் அவனுக்கு தோன்றியதுண்டு...
அவள் எனக்கு முதன் முதலாக சொல்லியக் கதை
மரங்கொத்திகளுடையது...
யூக்கலிப்டஸ் இல்லாத அடர்ந்த வனமது...
வயிற்றிலிருக்கும் முட்டைகளுள் ஆறு குட்டிகளையும் ஈன
தாய் மரங்கொத்தி கிளை தேடிக் கொண்டிருந்தது..
படுக்கையை அழகில் கொத்தியபடி
தந்தை பறவை முன்னால் சென்று கொண்டிருந்தது..
இலைகளே கிளையாக பூத்திருக்கும் கருணை மரம் அவைகளுக்கு வாழிடம் கொடுத்தன...
வாழிடத்தின் கிளையெங்கும் ஏராள பறவைகள்
இளைப்பாறின..
அந்த ஆலமரத்தின்
வேரொன்றில் பாறையும்
பாறையொன்றில் பெருங்குகையும்
குகையின் வழியே நீண்ட தடத்தின் வெளியில் நாமிருப்பதாகவும் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இப்பொழுதெல்லாம் அவை தூர்ந்து விட்டன...
குகை மனிதர்கள்
விண்ணதிரும் கட்டிடங்களில் ஆலமரத்தை கண்ணாடிக் குடுவைக்குள் பூட்டி வைத்திருந்த கதையை அவள் சொன்னாள்..
மரங்கொத்தியின் குட்டிகள் எங்கே என்றானவன்..
அந்த குட்டிகள் வானத்திலிருந்து நகர சாலையில் தலைக் குப்புற விழுந்து மாய்த்துக் கொண்டன..
கடைசி குட்டி தான் தானென்றாள்..
ஆதி நிலத்தின்
தேவதை அழிக்கப்பட்ட கதை சொல்ல தன்னை பணித்தாளென்றாள்..
பல ஆயிரம் ஆண்டுகளாக கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாள்..
அவளின் கண்களில் நீலம் உறையத் தொடங்கியது..
நகரம் சிரித்து கொண்டிருந்தது..